விலோம காலசர்ப்ப யோகம்
முன்னால் கேதுபகவான் பின்னால் ராகுபகவான் இருப்பது, அனைத்து கிரகங்களும் கேதுபகவானின் வாயை நோக்கிப் பயணப்படுவது, கேதுபகவானின் வாயிலிருந்து வெளிப்படும் விஷத்தால் தாக்கப்படுகின்றன. பின்பக்கம் ராகுபகவான், தனது வாலை கிரகங்கள் பக்கம் நீட்டிக்கொண்டு விலகிச் செல்வதால் அதிலிருந்து வெளிப்படும் விஷத்தாலும் தாக்கப்படுகின்றன. இதுதான் காலசர்ப்ப தோஷமாகும்.
அனுலோம காலசர்ப்ப யோகம்: முன்னால் ராகுபகவான் பின்னால் கேதுபகவான் இருப்பது அனைத்து கிரகங்களும் ராகுபகவானின் வாயை நோக்கி நகருகின்றன. கேதுபகவான் தன் வாலை கிரகங்கள் பக்கம் நீட்டிக்கொண்டு செல்கிறது. ராகுபகவானுக்கு வாயில் விஷமில்லை. கேதுபகவானுக்கு வாலில் விஷமில்லை. இதனால் அதிக பாதிப்பு இல்லை. இது காலசர்ப்ப யோகமாகும். இதை சர்ப்ப ராஜயோகம் என்றும் அழைப்பார்கள்.
பொதுவாக, காலசர்ப்ப தோஷ ஜாதகர்கள் 32 வயதுக்கு மேல்தான் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றமடைகிறார்கள். ராகு- கேது பகவான்களால் ஏற்படும் சர்ப்ப தோஷம் மற்றும் காலசர்ப்ப தோஷம் ஆகியவைகள்பரம்பரை பரம்பரையாகத் தொடர்கின்றன. பல குடும்பங்களில் குடும்பத்தினர் அனைவருக்குமோ அல்லது பெரும்பான்மையினருக்கோ அனைத்து கிரகங்களும் ராகு- கேது பகவான்களின் பிடிக்குள்ளோ, லக்னம், குடும்பம், சுகம், அல்லது பஞ்சமம் (ஐந்து) ஆகிய ஸ்தானங்களிலோ அல்லது கிரகங்கள் ராகு- கேது பகவான்களின் சாரம் பெற்று சுபக்கிரகச் சேர்க்கை, பார்வை பெறாமல் போவதோ பெரும்பான்மையாக அமைகிறது. இத்தகைய குடும்பத்தினருக்கு திருமணத் தாமதம், தடை, புத்திர பாக்கிய தாமதம், தடை ஆகியவை பரவலாக அமைகிறது. இத்தகைய குடும்பத்தினர் சர்ப்ப சாந்தி, நாகப் பிரதிஷ்டை ஆகியவைகளைச் செய்து குறைகளைப் போக்கிக் கொள்ள வேண்டும். இவைகள் பெரும்பாலும் சர்ப்பத்துக்கு முற்பிறவியில் செய்த துன்பங்களின் காரணமாக அமைகிறது என்று கூற முடிகிறது.
- கே.சி.எஸ். ஐயர்