ஆந்திராவில் பானகம் குடிக்கும் அதிசயமான நரசிம்மர் கோயில் ஒன்று உள்ளது.
விஜயவாடாவிற்கு முன்னதாக சுமார் 41 கி.மீ. தொலைவில் உள்ள குண்டூரில் மங்களகிரி என்னும் மலையின் மீது யானை வடிவில் பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட பானக நரசிம்மர் திருத்தலம் உள்ளது.
பித்தளை வாயுடன் கூடிய இவரே பானகம் அருந்தும் அதிசயத்தை நிகழ்த்தி வருகிறார். இந்நிகழ்வு அன்றாடம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நரசிம்மரை வேண்டிக்கொண்டு பானகம் கொடுத்தால் சகல பிரச்னைகளும் விலகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இதற்காகவே, இக்கோயிலின் சந்நிதியில் பானகமும் தனியாக விற்பனை செய்யப்படுகிறது. இக்கோயிலில் நரசிம்மருக்கு என பிரத்யேக உருவச்சிலை எதுவும் கிடையாது. ஆனால் நரசிம்மரின் அகலமான வாய்ப்பகுதி மட்டும் உள்ளது.
வெங்கலத் தகட்டினால் சுற்றிலும் மூடப்பட்டிருக்கும் வாயில் பானகம் என்னும் வெல்லம் கரைத்த நீர் விடப்படும்போது இறைவன் அதை உண்மையாகவே பருகுவது போன்று மடக்... மடக்... என பருகும் சத்தம் கேட்பதாக பக்தர்கள் சொல்கிறார்கள்.
சற்று நேரம் கழித்து அந்த சத்தம் நின்று விடுகிறதாகவும் , அந்த சத்தம் நின்றதும் மீதம் உள்ள பானகம் அப்படியே வாய்வழியாக வெளியேறி விடும் எனவும், அந்த பானகத்தையே, பக்தர்களுக்குத் தீர்த்தமாக வழங்குகிறார்கள் என்றும் கூறுகின்றார்கள்.