துர்க்கைக்கு தனிக் கோயில்
துர்க்கைக்கு தனிக் கோயில் சில இடங்களில் மட்டுமே உள்ளது. குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே தனிக் கோயிலில் துர்க்கை அம்மன் அருள் பாலித்து வருகிறார். திருமணத் தடை விலக இந்த அம்மனை வழிபடுகின்றனர்.
குண்டு முனீஸ்வரர்
பெங்களூருவில் குண்டு முனீஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பூட்டு வாங்கி வைத்து வழிபாடு செய்கின்றனர். பெங்களூரு கிரைஸ்ட் கல்லூரிக்கு அருகில் இக்கோயில் உள்ளது. வழக்குகளில் வெற்றி பெற குண்டு முனீஸ்வரரை வழிபட்டு வருகின்றனர்.
ஆபத்சகாயேஸ்வரர்
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள பொன்னூர் கிராமத்தில் சிவபெருமான் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். அம்பாள் பிரசன்ன நாயகி. நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்க ஆபத்சகாயேஸ்வரரை வழிபட்டு வருகின்றனர்.
இருக்கன்குடி மாரியம்மன்
சாத்தூரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது இருக்கன்குடி மாரியம்மன் கோயில். கண் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிறப்பு வழிபாடு
செங்கல்பட்டு சிங்கப்பெருமாள்கோவிலில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது அனுமந்தபுரம். இங்குள்ள அகோர வீரபத்திரர் சுவாமி கோயிலில் அமாவாசை பெளர்ணமி மற்றும் திங்கள்கிழமைகளில் மன நலம் குன்றியவர்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
சித்ரகுப்தன் கோயில்
சித்திரகுப்தருக்கு தனி கோயில் சில ஊர்களில் மட்டுமே உள்ளது. அதில் முக்கியமானது காஞ்சிபுரத்திலுள்ள சித்ரகுப்தன் கோயில். பெளர்ணமியன்று விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்
ரோகிணி நட்சத்திரத்தில்...
சென்னை முகப்பேரில் உள்ள சந்தான சீனிவாசப் பெருமாள் கோயிலில் ரோகிணி நட்சத்திரம் அன்று அர்ச்சனை செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம்.