ஆக்கத்திற்கும் அழிவிற்கும் விதியே முக்கிய காரணம் என்று எண்ணி அமைதி பெற வேண்டும் என்று புகழ்பெற்ற நீதிமான் ராஜாபத்ருஹரி குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஒரு சிறுகதையை உதாரணமாகக் கூறுகிறார். ஒரு பாம்பாட்டி ஒரு பாம்பை பட்டினி போட்டு ஒரு கூடையில் வைத்திருந்தான். பட்டினியால் பாம்பு இறந்துவிடும் நிலைக்குச் சென்று விட்டது. அந்த வழியாக வந்த எலி, இந்த கூடையுள் ஏதோ ஒரு சாப்பிடும் பொருள் கிடைக்கலாம் என்று கூடையை ஓட்டைப் போட்டு உள்ளே சென்றது. இந்த எலியைப் பாம்பு பிடித்து சாப்பிட்டுவிட்டு அந்த ஓட்டையின் மூலம் வெளியேறிவிட்டது. இதில் பாம்பின் ஆக்கத்திற்கும், எலியின் அழிவிற்கும் விதியே காரணம் என்று இந்த கதையின் மூலம் நமக்கு விளக்குகிறார். தர்மமாக நடப்பவர்களை சனிபகவான் தண்டிப்பதில்லை. தனக்கொரு நீதி, ஊருக்கொரு நீதி என்று வாழ்பவர்களை தக்க சமயத்தில் தண்டித்து வாழ்க்கைப் பாடத்தினை நமக்கு உணர வைப்பார்.
சனிபகவான் நின்ற இடம் சுபிட்சமடையும். சனிபகவான் 3, 7, 10 }ஆம் இடங்களைப் பார்வை செய்வார், பொதுவாக, சனிபகவானின் பார்வை நலனை விளைவிக்காது என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் சனி, செவ்வாய் பகவான்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் அமைப்புள்ள ஜாதகங்கள் தெளிவு பெறாத நிலையிலும் கவலைகளால் மனம் அரித்த நிலையிலும் வாடும். ஆகவே, வேங்கடேசப் பெருமாளையும் சாஸ்தா, ஆஞ்சநேயரையும் பணிந்தால் சனிதோஷம் அறவே அகலும்.