மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்.. - 5

திருமந்திரம் சமய நூல் அன்று. "ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்' என போதிக்கிற தத்துவ நூல்.
மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்.. - 5

மாயம் கலந்த மனோலயம் ஆனதே..!


திருமந்திரம் சமய நூல் அன்று. "ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்' என போதிக்கிற தத்துவ நூல். இப்படித்தான் வாழ வேண்டும் என நெறிமுறைகளை வகுத்துத் தந்திருக்கும் நீதி நூல். ஆரோக்கியமாக வாழ வழி சொல்லும் மருத்துவ நூல். இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை, தன்னகத்தே கொண்டுள்ள அறிவியல் நூல்.

கரு உற்பத்தி முதல் குழந்தைப் பிறப்பு வரை 41 பாடல்களில் பதிவு செய்திருக்கிறார் திருமூலர். ஆண் குழந்தை பிறக்க, பெண் குழந்தை பிறக்க, நீண்ட ஆயுள் கொண்ட குழந்தை பிறக்க, மாற்றுத் திறனாளியாக ஒரு குழந்தை பிறக்கக் காரணம் என அனைத்தையும் திருமந்திரம் பேசுகிறது.

"ஏய்அம் அலந்த இருவர்தம் சாயத்துப்
பாயும் கருவும் உருவாம் எனப்பல
காயம் கலந்தது காணப் பதிந்தபின்
மாயம் கலந்த மனோலயம் ஆனதே...' (பாடல் 459).

பொருள்: பல பிறப்புகள் எடுத்து வருந்தி அலைந்து, தாய் - தந்தை இருவருடைய சாயல், குணம், எண்ணம், உணர்வுகள் பாய்ந்து, கரு, குழந்தையாக உருப்பெறும். அப்படி, பல பிறவிகள், பல உடம்பில் பொருந்திய அக்கருவானது, மயக்கம் பொருந்திய இருவரின் மன ஒருமைப்பாட்டைப் பெற்று இருக்கும்.

தாயின் கருவில் இருக்கும் குழந்தை, பெற்றோரின் குணம், எண்ணம், உணர்வுகளாலேயே உருப்பெறுகிறது என்கிறார் திருமூலர்.

மருத்துவர் ஜாண்.பி. நாயகம், "சூட்சுமம் திறந்த திறவுகோல்' என்ற தன் புத்தகத்தில், திருமந்திரம் கூறும் குழந்தை பிறப்பு பற்றிய செய்திகளை மருத்துவ துறை ரீதியாக ஒப்பிட்டு எழுதியுள்ளார். அவர் சொல்கிறார்... இப்பாடலின் முதல் வரியான "ஏய்அம் அலந்த'  என்பது பல பிறவிகள் எடுத்த தாய், தந்தை சாயலில், குணத்தில் குழந்தை பிறக்கும் என்கிறது. இதையே இன்றைய அறிவியல், குறிப்பாக ஞ்ங்ய்ங்ற்ண்ஸ்ரீள் எனப்படும் மரபியல், பரம்பரையாக நோயும், குணங்களும் தாய், தந்தையிடமிருந்து பிள்ளைகளுக்கு வரும் என்கிறது.

மரபியலின் தந்தை, "ஊஹற்ட்ங்ழ் ர்ச் ஞ்ங்ய்ங்ற்ண்ஸ்ரீள்' கிரிகோர் மேன்டல் கண்டு பிடித்ததை, திருமூலர் திருமந்திரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டார்.

குழந்தைப் பேறு என்கிற பெரும் பாக்கியத்திற்காக, முன்னோர்கள் யாகம் செய்த செய்திகளை இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்.

இப்படி, யாகம் செய்து, தவம் செய்து, குழந்தைப்பேறு பெறுவோர், குழந்தை கருவிலிருக்கும் போதே, நற்சிந்தனை, நற்குணம் கொண்ட குழந்தையாக, அக்குழவியை வளர்த்தெடுக்க வேண்டும், அது தந்தை, தாய் இருவரின்  கடமை என வலியுறுத்துகிறது திருமந்திரம்.

தாயின் மனதில் தீய எண்ணங்கள் இருப்பின், குழந்தையும் அத் தீய எண்ணத்தையே கொண்டிருக்கும் என்பதை மகாபாரதக் கதை புலப்படுத்துகிறது.

குந்தி தேவிக்கு, குழந்தை பிறந்ததைக் கேள்விப்பட்ட கர்ப்பிணியான காந்தாரி, பொறாமையால் உலக்கையை எடுத்து கோபத்தோடு, தன் வயிற்றில் அடித்தாளாம்.

"அற்றனள்  துயரம் எல்லாம்
அருந்தவம் பயனால் மைந்தன்
பெற்றனள் குந்தி என்னும்
பேருரை கேட்ட அன்றே
உற்றனள் பொறாமை கல்லால்
உதரம் உட்குழம்பு மாறு
செற்றனள் தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள்'

காந்தாரியின் அந்தப் பொறாமை குணத்தாலேயே, கெளரவர்கள், பாண்டவர்கள் மேல் பொறாமை கொண்டவர்களாக, மனதில் வஞ்சம் மிகுந்தவர்களாக இருந்தனர் என்கிறார் வில்லிப்புத்தூரார்.

ஆகவே தான், குழந்தை கருவிலிருக்கும் போது, நல்லதை மட்டுமே எண்ண வேண்டும். தாயின் உணர்வு, குழந்தையைப் பாதிக்கும் என்கிறார் திருமூலர்.

இதே கருத்தை மற்றொரு பாடலிலும் சொல்கிறார் திருமூலர்...
"பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்று
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்ந்து உற்று இரு திங்கள் சேராது அகலினும்
மூப்புற்றே பின்னாளில் ஆமெல்லாம்  உள்ளவே'  
(பாடல் 1945).

உலகத் தொடர்பு ஏதும் இல்லாமல், தாயின் கருவறையிலேயே வளரும் குழந்தை, உலகிற்கு வந்து, இரண்டு மாதத்தில் இறந்து போனாலும், மூப்படைந்து வயதாகி இறந்தாலும், கருவில் இருந்த போது அது உணர்ந்த இன்ப, துன்பங்கள் அதன் எண்ணத்தில் இருக்கும்.

எனக்குப் படிக்கப் படிக்க ஆச்சரியம் தருகிறது இந்தப் பாடல். நான் விலங்கியல் இளங்கலை படித்த போது, "கருவுறுதல்' ஒரு பாடமாக இருந்தது. அத்துறை வல்லுநரான மருத்துவர்கள் அவ்வப்போது வகுப்பெடுப்பார்கள். அப்படி வகுப்பெடுக்க வந்த உளவியல் மருத்துவர் சொன்ன செய்தி, மேற்கண்ட திருமந்திரம் பாடலுக்குப் பொழிப்புரையாக இருப்பதுதான் ஆச்சர்யம்.

ஒரு தம்பதியினருக்கு, அழகும், அறிவும் நிறையப் பெற்ற ஒரே மகன். தன் 21-ஆவது வயதில் தற்கொலை செய்து கொண்டான். பெற்றோருக்கு என்ன காரணம் எனத் தெரியாததுதான் பெரும் துன்பமாக இருந்தது. நல்ல வசதி. மகன் கேட்டு எதையும் மறுத்ததில்லை. படிப்பில் எப்போதுமே முதல் மாணவன். காதலுக்கு வாய்ப்பில்லை. இருந்தாலும் நாங்கள் மறுக்கப் போவதில்லை. எங்களிடம் எல்லாவற்றையும் மனம் விட்டுப் பேசுபவன். ஏன் இறந்தான் என்றே தெரியவில்லையே என பெற்றோர் அரற்றினர். 

கணவர் கொஞ்சம் தேறி வர, மனைவியோ தாளாத சோகத்தில் இந்த உளவியல் மருத்துவரிடம் "கவுன்சிலிங்' க்கு வருகிறார். பல கட்ட ஆலோசனைக்குப் பிறகு, அவர்கள் மகனின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டு பிடிக்கிறார் மருத்துவர். அவன் இறந்ததற்குக் காரணம் "செப்டம்பர் 3-ஆம் தேதி'.

ஒரு தேதி, எப்படி ஒருவனின் மரணத்திற்குக் காரணமாக இருக்க முடியும்? அது பற்றி வகுப்பெடுக்கவே அவர் வந்திருந்தார்.

அக் குழந்தை வயிற்றில் இருந்த போது, இப்போது இந்தக் குழந்தை வேண்டாம் என முடிவெடுத்து மருத்துவரிடம் செல்கின்றனர். மருத்துவர் குழந்தையைக் கலைக்க வேண்டாம் என அறிவுறுத்து

கிறார். கணவனும், மனைவியும், "இந்தக் குழந்தையை இப்ப ஒண்ணும் பண்ண முடியாதா? இதை எப்படிக் கலைப்பது ?' என நாள் முழுக்க தங்களுக்குள் பேசி... நினைத்த நாள் "செப்டம்பர் 3'.

வயிற்றிலேயே குழந்தை அதை உணர்ந்திருந்ததோ என்னவோ? நான் இந்த  உலகத்தில் இருக்கக் கூடாது என அது மனதில் இருந்த அழுத்தமே, 24 வருஷங்களுக்கு முன், பெற்றோர்கள் நிர்ணயித்தத் தேதியில் தற்கொலை செய்து கொள்ளக் காரணம்.

இப்போது, திருமந்திரம் பாடலை இன்னொரு முறை படியுங்கள்... தாயின் கருவறையிலேயே அனைத்து உணர்வுகளையும் பெறுகிற குழந்தை, இரண்டு வயதில் இறந்தாலும், மூப்படைந்து வயதாகி இறந்தாலும், வயிற்றில் அது உணர்ந்த இன்ப, துன்பங்கள் அதன் எண்ணத்தில் வலுவாக இருக்கும். எவ்வளவு பொருள் செறிந்த பாடல்!

-தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com