உபகாரம் மட்டுமே நட்புக்கு அறிகுறியல்ல; அபராதமும் விரோதத்தின் லட்சணம் அல்ல. "எதற்கும் நல்லெண்ணமா, கெட்ட எண்ணமா?' என்ற மனநிலை ஒன்றுதான் உண்மையில் சரியான காரணமாகும்.
- பஞ்சதந்திரம்
நீண்ட காலம் இடைவிடாமல் ஆன்மிக சாதனைகளைப் பயிற்சி செய்ய வேண்டும். அவ்விதம் செய்யப்பட்டால் அது உறுதியாகி விரும்பிய பலனைத் தரும்.
- யோக சூத்திரம்
அம்மா தேவி! ஆழங் காண முடியாததாக சம்சாரச் சேற்றுக்குழி இருக்கிறது! மனை மக்களான பாரம் வேறு என்னை அழுத்துகிறது! இதிலிருந்து விடுபடுவதற்கு இயலாத வகையில், மோகமும் பற்றுமாகிய கயிறுகள் என் உடல் முழுவதையும் நெடுங்காலமாகப் பிணைத்திருக்கின்றன. இந்த நிலையில் என்னைக் கடைத்தேற்றுவதற்கு, நீ ஒருத்தியே ஆற்றல் பெற்றவள்.
- ஸ்ரீ சங்கரர் (தேவீ புஜங்கம்
சம்போ! தங்களுக்கு உணவு விஷம், பாம்புதான் ஆபரணம், உடையோ புலித் தோல், வாகனமோ பெரிய காளைமாடு; எனக்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள்? எனக்கு வேண்டியது தங்களிடம் என்ன இருக்கிறது? ஒன்றும் வேண்டாம். தங்கள் தாமரை போன்ற பாதங்களில் எனக்கு பக்தி மட்டும் கொடுங்கள்.
- சிவானந்த லஹரீ, 87
கர்மத்தாலோ, மக்களைப் பெறுவதாலோ, செல்வத்தாலோ அல்ல; தியாகத்தினால்தான் சிலர் மரணம் இல்லாத பெருவாழ்வை அடைந்திருக்கிறார்கள்.
பரப்பிரம்மம் சொர்க்கத்திற்கும் மேலானதாகவும், (அறிஞர்களின் புத்தியாகிய) குகையில் வைக்கப்பட்டுப் பிரகாசிப்பதாகவும் விளங்குகிறது. அந்தப் பரப்பிரம்மத்தை ஞான வாழ்க்கையில் முயற்சி செய்பவர்கள் அடைகிறார்கள்.
- மஹாநாராயண உபநிஷதம் 12.3.4
அனைவருக்கும் அழிவற்ற சுகத்தை உண்டாக்கவல்ல சிவபெருமானே! உங்களுடைய குளிர்ந்த கருணைபார்வை என்ற அமிருதத்தைப் பொழிந்து, எனது தாபத்தை அகற்றிவிடுங்கள். நான் தங்களின் கருணையையே எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பேன்.
- ஆர்திஹர ஸ்தோத்ரம்