அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்.
அல்லாஹுதிதஆலாவை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சி, முஸ்லிமாக வாழ்ந்தால்தான், முஸ்லிமாக மரணிக்க முடியும். அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறை எதுவென்றால், நபி (ஸல்) அவர்களுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நம்முடைய செயல்களை அமைத்துக் கொள்வதுதான்.
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஒவ்வொன்றும் பின்பற்றி நடக்கத்தானே தவிர, தெரிந்து வைத்துக்கொள்ள அல்ல; சிலர் தீனைத் தெரிந்து வைத்திருந்தாலே தன்னைத் தீன்தாரி என நினைக்கின்றனர்.
நம்முடைய செயல்களை நாம் உற்று நோக்கினால் பல விஷயங்களைப் புரிந்துகொள்ளலாம். உதாரணமாக, பொய் சொல்வது என்பது கடுமையாக வெறுக்கப்பட்ட செயல். ஆனால், நம்முடைய பேச்சை உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்தால், நம்முடைய பேச்சில் பொய் மிகைத்திருப்பதைக் காணலாம். விளையாட்டுக்காகக்கூட பொய் பேசுவதை இறைவன் அனுமதிக்கவில்லை.
நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். அப்போது என் தாயார் என்னை அழைத்து, "இங்கே வா: ஒரு பொருள் தருகிறேன்' என்று கூறினார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் என் தாயாரிடம், "நீர் அவனுக்கு என்ன தரப்போகிறீர்?' என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், "நான் அவனுக்குப் பேரீச்சம் பழம் தர விரும்புகிறேன்!' என்று பதில் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் என் தாயாரிடம், "நீர் எதனையாவது தருவதாகக் கூறி அழைத்துவிட்டு, எதுவும் தராவிட்டால், உன் செயலேட்டில் அது பொய்யாக எழுதப்பட்டுவிடும்!' என்று கூறினார்கள்.
விளையாட்டாகக்கூட பொய் சொல்ல அனுமதி இல்லை எனும்போது, வேண்டுமென்றும் திட்டமிட்டுச் சொல்லப்படும் பொய்களுக்கு இறைவனிடம் என்ன பதில் கூறப்போகிறோம்?
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
நிச்சயமாக, உண்மை சொல்வது நன்மையின்பால் வழிநடத்துகிறது. நன்மை சுவர்க்கம் வரை சேர்த்துவிடுகிறது. உண்மை சொல்லிக் கொண்டே இருக்கும் மனிதனுடைய பெயர் "ஸித்தீக்' (உண்மையாளர்) உடைய பட்டியலில் எழுதப்படுகிறது. சந்தேகமின்றி, பொய் சொல்வது தீமையின்பால் கொண்டு செல்கிறது. தீமை அவனை நரகம் வரை சேர்த்து விடுகிறது. இறுதியில் அவனின் பெயர் "பொய்யர்களின்' பட்டியலில் எழுதப்பட்டு விடுகிறது.