உலக வரலாற்றில் உன்னதம்!

குடும்ப வாழ்க்கை, சொந்தத் தொழில், அரசுப் பணி எதுவானாலும் ஆடம்பரமின்றி எளிய வாழ்வுடையோரால் தான் சிறந்த..
உலக வரலாற்றில் உன்னதம்!


குடும்ப வாழ்க்கை, சொந்தத் தொழில், அரசுப் பணி எதுவானாலும் ஆடம்பரமின்றி எளிய வாழ்வுடையோரால் தான் சிறந்த நிர்வாகியாக இருக்க முடியும்.  இப்பண்புகளைக் கொண்டோர்களால், எதிரியைக் கூட நண்பர்களாக உருவாக்க முடியும்.  வீரத்தாலும், அதிகாரத்தாலும் வீழ்த்துவதை விட, அன்பான வார்த்தைகளால் பேசி வெற்றி பெறலாம்.

சொல், செயல், தோற்றம் மற்றும் அனைத்து நற்பண்பிலும் "எளிமை' என்கிற இயற்பண்பை மேற்கொள்ளும்படி இஸ்லாம் வலியுறுத்துவதை, இலாத்தின் இரண்டாவது கலீஃபா (ஜனாதிபதி) உமர் (ரலி) அவர்களது வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வின் மூலம் காண்போம்.

உமர் (ரலி) அவர்கள் பொறுப்பை ஏற்று மக்களிடன் உரையாற்றும்போது, "நான் ஆட்சியில் தவறு செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?' எனக் கேட்டார்கள். ஒரு முதியவர், "நாங்கள் பேசமாட்டோம்.  இதோ இந்த வாள் பேசும்' என்றதும் ஜனாதிபதி பெருமகிழ்வோடு, தட்டிக் கேட்கும் தைரியம் படைத்த குடிமக்களைத் தந்த இறைவனைப் புகழ்ந்து, அந்த முதியவருக்கு நன்றி தெரிவித்தார்கள்.

கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஜெருசலேத்திலுள்ள, "பைத்துல் முகத்தஸ்' புனித ஆலயத்தினை பெற்றுக் கொள்ள அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி உமர் (ரலி) ஒட்டகத்தில் அமர, ஒட்டகம் ஓட்டுபவர் "அயாஸ்' ஒட்டகக் கயிற்றைப் பிடித்தபடி நடந்து வந்தார்.  சிறிது தூரம் சென்றபின், ஒட்டக ஓட்டி மிகவும் களைப்பாகத் தென்பட்டார்.  இதனைக் கண்ட ஜனாதிபதி ஒட்டக ஓட்டியை ஒட்டகத்தில் அமரும்படி கட்டளையிட்டதுடன், ஒட்டகக் கயிற்றைத் தானே பிடித்து நடந்து வந்தார்கள்.

ஜனாதிபதியை வரவேற்கச் சென்ற இஸ்லாமியப் போர்ப்படைத் தளபதி அபூஉபைதா (ரலி) இக்காட்சியினைக் கண்டு அதிர்ச்சியுற்று, "யூதத் தலைவர் முன் இத்தோற்றத்தில் அன்பு கூர்ந்து வரவேண்டாம்.  ஒட்டகத்தில் அமர்ந்து வாருங்கள்!' எனப் பணிவாக வேண்டினார்.

"கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன' என்ற இறைமறை அர்குர்ஆன் அத்.4 } வசனம் 139}ஐ ஓதிக்காட்டி மேலும் "இவர்களிடம் நாம் கண்ணியத்தை எதிர்பார்க்க வேண்டிய அவசியமும், தேவையும் இல்லை!' எனக் கூறி ஒட்டகத்தில் ஏறிவர மறுத்து, ஒட்டகக் கயிற்றைப் பிடித்து நடந்தே வந்தார்கள் ஜனாதிபதி.

இவ்வாறு ஆட்சி புரிந்த கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலம், உலக வரலாற்றில் உன்னதமாகப் போற்றப்படுவதாக அமையப் பெற்றிருந்தது. நமது இந்தியத் திருநாட்டில் வாழ்ந்து மறைந்த மகாத்மா காந்தியடிகள், "கலீஃபா உமரின் ஆட்சி போல் நமது நாட்டில் அமைய வேண்டும்' எனக் கூறியுள்ளார் என்பதை நினைவு கூர்வோம்!

- ஹாஜி முகம்மது அன்வர் தீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com