குகையில் வளரும் கனலே!

சிவ-பார்வதி திருக்கல்யாணத்தைத் தரிசனம் செய்ய ரிஷிகள், சித்தர்கள் அனைவரும் கைலாயத்தில் குழுமியதால் பாரம் ஏற்பட்டு வடதிசை தாழ்ந்ததும்,
குகையில் வளரும் கனலே!

சிவ-பார்வதி திருக்கல்யாணத்தைத் தரிசனம் செய்ய ரிஷிகள், சித்தர்கள் அனைவரும் கைலாயத்தில் குழுமியதால் பாரம் ஏற்பட்டு வடதிசை தாழ்ந்ததும், தென்திசை உயர்ந்ததும் தெரிந்ததே! இதனை சமன் செய்ய ஈசனால் தென்திசைக்கு அனுப்பப்பட்ட அகத்தியர், பொதிகை மலைக்குச் செல்லும்வழியில் தோரணவாயிலாக விளங்கிய தோரணமலையை அடைந்து, அங்கு முருகப்பெருமானின் சிலையை நிறுவினார். அங்கிருந்த சுனைகளில் நீராடி மகிழ்ந்தார். குகைகளில் அமர்ந்து தவம்புரிந்தார். 

அப்பொழுது முருகன் அருளால் மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஆதுரசாலை எனப்படும் முதல் மருத்துவமனையைத் தோரணமலையில் ஏற்படுத்தினார். அதன்பின், தாம் தென்திசை வந்த நோக்கம் நினைவுக்கு வரவே மருத்துவம், சித்து வேலைகளைத் தேரையர் சித்தருக்குக் கற்றுக்கொடுத்து விட்டு பொதிகை மலைக்குச் சென்றுவிட்டார் அகத்தியர்.  
800 ஆண்டு காலம் வாழ்ந்து, நெடுங்காலம் மருத்துவச் சேவை புரிந்த தேரையர், இறுதியில் தோரணமலையிலேயே ஜீவசமாதியாகிவிட்டார். அகத்தியரும் தேரையரும் தோரணமலையில் மேற்கொண்ட அறுவைச் சிகிச்சையே உலகின் முதல் மண்டை ஓட்டு அறுவை சிகிச்சையாக விளங்குகிறது என்பது வரலாறு. 

மலை அடிவாரத்திலிருந்து 926 படிகள் கடந்து சென்றால் உச்சியிலுள்ள சுவாமி சந்நிதியை அடையலாம். இந்த முருகனைத் தரிசித்து வந்தால் அனைவரது மனக் கவலைகளும் தீரும் என்பது நம்பிக்கை.   

மலையில் முருகன் ராஜ அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். அவர் பக்தர்களின் பிரார்த்தனையை ஏற்று கல்யாண வரமளிக்கிறார் என்று பரவசத்துடன் கூறுகின்றனர் பக்தர்கள். 

தோரணமலை படிக்கட்டுகளில் ஏறி, முருகனைத் தரிசித்த பிறகு ஒரு புத்துணர்வு ஏற்படும். இந்தக் கோயில் மருத்துவத்திற்காக மட்டுமல்லாமல் பலவித பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்காகவும் பெயர் பெற்றது.

பாரதியார் தோரணமலை முருகனை "குகையில் வளரும் கனலே!'  என்று போற்றிப் பாடியுள்ளார். இங்குள்ள சுனையில் நீராடி, ஒரு நாழிகை நேரமாவது தியானம் புரிந்து முருகனை வழிபடுவோருக்கு  மாயை, குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கிறது.  அடிவாரம், மலைப்பகுதி, மலையுச்சிகளில் மொத்தம் 64}க்கும் மேற்பட்ட சுனைகள் உள்ளன. இவையனைத்தும் வெவ்வேறு மருத்துவ குணமும்,  தனித் தனிச் சுவையும் கொண்டவையாகும். 

பெüர்ணமிதோறும் கிரிவலம்  வந்து முருகனை வழிபடுவது தோரணமலையின் தனிச்சிறப்பாகும்; மன்னர்கள் காலந்தொட்டே இக்கிரிவலம் வழக்கத்திலுள்ளது குறிப்பிடத்தக்கது.   "யானை வடிவிலேயே அமைந்துள்ள மலையில்' வீற்றிருந்து அருள்பாலிப்பது தோரணமலை என்னும் இத்தலத்தில் மட்டுமே! 

தென்காசியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் தோரணமலைக் கோயில் அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள கல்யாண மண்டபத்தில் அனைத்து பக்தர்களும் இலவசமாக தங்கிச் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த மலைக் கோயிலின் படிக்கட்டுகளுக்கு மேற்கூரை அமைத்தல், சூரிய சக்தி விளக்குகள் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்துதல் இதுபோன்ற பல்வேறு திருப்பணிகளுக்கு பக்தர்கள் பொருளுதவி செய்து முருகன் அருளைப் பெறலாம். 

மேலும் விவரங்களுக்கு: கே.ஏ.செண்பகராமன் - 99657 62002. 

- த. ஜெயலட்சுமி, ஈரோடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com