மயிலாடுதுறையை அடுத்த திருமணஞ்சேரி தலத்தில் உத்வாகநாதர் கோயிலில் அம்பிகை கோலிலாம்பாள், மணமேடையில் மணமகள் இருக்க வேண்டிய முறையில் சுகாசனத்தில் அமர்ந்தக் கோலத்தில் காட்சி தருகிறாள்.
திருஞானசம்பந்தர் பாடலுக்கு மகிழ்ந்த சிவன் பொன்தாளம் அளித்த திருத்தலம் திருக்கோலக்கா. இங்கு சுவாமி பெயர் சத்தபுரீஸ்வரர். அம்பாள் திருநாமம் ஓசை கொடுத்த நாயகி.
கோயில்களில் எந்தெந்த பூஜை வேளைகளில் எந்தெந்த இசைப் பாடல்களைப் பாட வேண்டும் என்ற நியதி உண்டு. சூரிய உதயத்துக்கு முன்பாக, பூபாளம், பௌளி, மலயமாருதம், மாயமாளவ, கௌனை ராகங்களையும் பாட வேண்டும். காலையில் பிலஹரி, அம்சத்வனி, கேதாரம் ராகங்களும், முற்பகலில் பேகட, தர்பார், முகாரி, நாட்டைக்குறிஞ்சி, வசந்தா, பூர்வி கல்யாணி ராகங்களும், மாலையில் சண்முகப் பிரியா, கல்யாணி, சாரங்கா ராகங்களையும், இரவில் நீலாம்பரி, ஆனந்த பைரவி, அமிர்த கல்யாணி, யதுகுலகாம்போதி ராகங்களையும் பாட வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட திருப்புறம்பயம் எனும் ஊரில், பழங்காலத்தில் ஒருசமயம் பெய்த மழையால் பிரளயம் ஏற்பட்டது. அப்போது, அந்த ஊர் மக்கள் பிள்ளையாரை வேண்டி ஒரு குடம் தேன் எடுத்து அபிஷேகம் செய்தனர். ஒரே நாளில் பிரளய நீர் முழுவதும் பின்வாங்கி, இயல்புநிலை ஏற்பட்டது. அதிலிருந்து, அந்த ஊர் பிள்ளையாருக்கு "பிரளயம் காத்த பிள்ளையார்' என்றே திருநாமம்.
சிவன் கோயில்களில் மூலவர் லிங்கத் திருமேனிபோல், நைமிசாரண்யம், கடில், கொல்லூர் ஆகிய மூன்று தலங்களில் அம்பிகை, லிங்கத் திருமேனியுடன் அருள்பாலிக்கின்றனர். இது அந்தத் தலங்களின் சிறப்பாகும்.
உ.ராமநாதன், நாகர்கோவில்.