திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது, அம்பலம் என்னும் சொல் பெற்ற ஒரே திவ்விய தேசம்.. என்று பல சிறப்புகளையுடைய ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் சமேத பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் பிப். 21}ஆம் தேதி காலை 11 மணிக்கு மேல் 11.55 மணிக்குள் நடைபெறுகிறது.
இந்தக் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உள்பட்ட சீர்காழி வட்டத்தில் உள்ள திருநாங்கூரில் உள்ளது. "தெற்று' என்றால் செறிந்த என பெரியாழ்வார் பாசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்பலம் என்றால் இறைவன் குடி கொண்டுள்ள இடம் எனப் பொருளாகும். திரு என்றால் செல்வம் எனப்படும். இங்கு குடி கொண்டுள்ள பெருமாள், "வேண்டும் செறிந்த செல்வத்தை அருளுபவன்' என்னும் பொருளில் "திருத்தெற்றியம்பலம்' எனக் குறிக்கப்படுகிறது.
ஒருசமயம் ஓர் சாபத்தால் சூரியனின் ஒளியும் வலிமையும் குறையத் தொடங்கியது. தனது பிரகாசத்தையும் வலிமையையும் மீட்பது தொடர்பாக மிகவும் கவலை கொண்ட சூரியன், அசரீரி வாயிலாக அறிந்து, இந்தத் தலத்துக்கு வந்து புஷ்கரிணியில் நீராடி சுவாமி தரிசனம் செய்தது. இதனால், சாபம் நீங்கி முன்போல் அவரது பிரகாசமும், வலிமையும் கிடைத்தன.
"செல்வாக்கு குறைந்தவர்கள், உயர் பதவி பெற விரும்புபவர்கள், புகழ், பெருமையை தலைமுறை தலைமுறையாகக் காக்க விரும்புபவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலம் வந்து ஒருநாள் தங்கியிருந்து வழிபாடு செய்தால், அனைத்து பிரச்னைகளும் தீரும்' என்பது ஐதீகம். பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு நெய், துளசி சாற்றி வழிபாடு செய்கின்றனர்.
சிறப்புமிக்க இந்தக் கோயில் திருப்பணிகள் மகாராண்யம் முரளிதர சுவாமிகள், ஜெய் ஹனுமான் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோரின் உதவியுடன் நடைபெற்று
வருகின்றன.
விவரங்களுக்கு 9790439331