பிலிப்பின்ஸ் புயல்: 1,200 பேர் பலி?

பிலிப்பின்ஸ் புயல்: 1,200 பேர் பலி?

பிலிப்பின்ஸ் நாட்டை வெள்ளிக்கிழமை தாக்கிய "ஹையான்' புயலில் சிக்கி 1,200க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிலிப்பின்ஸ் நாட்டை வெள்ளிக்கிழமை தாக்கிய "ஹையான்' புயலில் சிக்கி 1,200க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிலிப்பின்ஸ் நாட்டின் மத்தியத் தீவான சமரில் அதிகாலை 4.40 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) இப்புயல் தாக்கியது.

இதுகுறித்து விமானப் போக்குவரத்து ஆணைய துணை இயக்குநர் கேப்டன் ஜான் ஆண்ட்ரூஸ் கூறுகையில், "இந்தப் புயலின் தாக்கம் மத்திய பிலிப்பின்ஸில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் புயல் பாதிப்பில் 1,200-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது' என்று தெரிவித்தார்.

புயல் காரணமாக, சுமார் 7.50 லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

"ஹையான்' புயல் கரையை அடைந்தபோது மணிக்கு 235 கி.மீ. முதல் 275 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு சாதனங்கள் துண்டிப்பு: புயல் தாக்கியதால், பிலிப்பின்ஸ் நாட்டில் தொலைத்தொடர்பு சாதனங்கள் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு ஏற்பட்டுள்ள முழுமையான சேத விவரங்கள் இதுவரை தெரியவில்லை. பிலிப்பின்ஸ் அரசு, சனிக்கிழமை காலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவலின்படி புயலுக்கு இதுவரை 138 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தெற்கு லேய்ட் ஆளுநர் ரோஜர் மெர்கேடோ கூறுகையில், "பல வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலை வசதிகளும் முடங்கிப் போயுள்ளன. கருமேகங்கள் சூழப்பட்டுள்ளதால், பகல் கூட இரவுபோல் காட்சி அளிக்கிறது. இந்தத் தருணத்தில் கடவுளைப் பிராத்தித்துக் கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

எனினும், இந்தப் புயலில் அதிக உயிரிழப்பு மற்றும் பொருள் சேதங்கள் ஏற்பட்டிருக்குமோ என்று அஞ்சுகிறேன்' என்று தெரிவித்தார்.

பேரிடர் தடுப்புப் பிரிவுத் தலைவர் எட்வர்டோ டெல் ரோஸாரியோ கூறுகையில், "மத்தியத் தீவில் மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் வீசிய புயல் காரணமாக 600 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த கருமேகங்கள் சிதறியடிக்கப்பட்டு, வரவிருந்த பெரு மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் பெரும் உயிரிழப்பு நிகழாமல் தடுக்கப்பட்டது' என்றார்.

புயலுக்கு முன்னதாக லட்சக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியதால் பல உயிர்களைக் காப்பாற்ற முடிந்ததாக அந்த மாகாண ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ராய் தேவரதுர்தா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com