இலங்கை வவுனியா மாவட்டத்தில் ராணுவத்துடன் நிகழ்ந்த சண்டையில் விடுதலைப்புலிகள் எனக் கருதப்படும் இருவர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.
2009-ஆம் நடைபெற்ற இறுதிக்கட்டப் போருக்குப் பின், விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக நிகழ்ந்துள்ள இந்த ஆயுத மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் ரூவன் வனிகசூர்யா கூறுகையில், ""வடக்கு வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி வனப்பகுதியில், ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் கோபி (எ) காஞ்சீபன் பொன்னையா செல்வநாயகம், தெய்வன் (எ) சுந்தரலிங்கம் காஞ்சீபன் ஆகியோரும், மற்றொரு நபரும் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன'' என்று தெரிவித்தார்.
உயிரிழந்த மூன்றாவது நபர் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அப்பன் என்பவரா என்பது குறித்து ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.
கொல்லப்பட்ட கோபியை, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க முயன்று வந்ததாகக் கூறி கடந்த மாதத்திலிருந்தே ராணுவம் தேடி வந்தது.
வடகிழக்கு மாகாணத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் நடவடிக்கைகளிலும், சமூகங்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் கோபி மற்றும் அவரது சகாக்கள் ஈடுபட்டு வந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
65 பேர் கைது: இதற்கிடையே, விடுதலைப்புலிகள் இயக்கத்தை இலங்கையில் மீண்டும் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கடந்த மாதம் 65 பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.