ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளைக் குறிவைத்து சனிக்கிழமை அதிகாலை பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை நிகழ்த்தினர். இதில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் எட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருவதையடுத்து, பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள் கடந்த சில மாதங்களாகவே தீவிரப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.