இலங்கையின் ஜாஃப்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம். இளஞ்செழியன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துரிதமாக செயல்பட்ட பாதுகாவலர் நீதிபதியின் உயிரை காப்பாற்றினார்.
ஆனால், துரதிருஷ்டவசமாக அந்தக் காவலர் சரத் பிரேமச்சந்திரா துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார். இதையடுத்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா , அந்த காவலரது குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்று சிறப்பாகச் செயல்படும் காவலர்கள் ஒட்டுமொத்த அரசாங்கத்துக்கும், இலங்கை காவல்துறைக்கும் சிறந்த முன் உதாரணமாகத் திகழ்கின்றனர் என இறந்த காவலர் சரத்துக்கு புகழாரம் சூட்டினார்.
இந்நிலையில், இலங்கையின் அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள தலைமை நீதிபதிகளுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு காவல்துறை ஐ.ஜி-க்கு சிறீசேனா உத்தரவிட்டார்.
மேலும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைந்து விசாரணை நடத்தி முடிக்குமாறும் உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல் அந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது படுகாயமடைந்த மற்றொரு காவலரிடம் விரைந்து குணமடைந்து வீடு திரும்புமாறு ஆறுதல் கூறினார்.