பக்கோட்டா: கொலம்பியா வணிக வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.
கொலம்பியா நாட்டின் தலைநகர் பக்கோட்டாவின் ஜோனா ரோசா பகுதியில் உள்ள ‘ஆன்டினோ ஷாப்பிங் சென்டர்’ என்ற வணிக வளாகத்தில் தந்தையர் தினத்துக்காக பரிசுப்பொருட்கள் வாங்குவதற்காக சுமார் 5 மணியளவில் கூட்டம் அலைமோதியது.
அப்போது, அங்குள்ள மகளிர் கழிவறையில் பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். குண்டு வெடிப்புக்குப் பின்னர் அங்கு வந்திருந்தவர்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
உயிரிழந்த 3 பெண்களில் ஒருவர், 23 வயதான பிரஞ்சு பெண் ஜூலி ஹூயின், அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவன பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்தார் என தெரிய வந்துள்ளது. இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 பெண்கள் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்தனர்.
இந்த வெடிகுண்டு வெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும் போலீஸாரும், மீட்பு குழுவினரும் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என்று கொலம்பியா அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.