பிரிட்டன் தலைநகர் லண்டனில் தீக்கிரையான கட்டடத்தின் வெளிபுறச் சுவர்களில், பிரிட்டன் அரசால் தடை செய்யப்பட்ட வெளிப்புறச் சுவர் தகடுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அந்த நாட்டு வர்த்தக அமைச்சர் கிரெக் ஹேண்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நாடு முழுவதும் புதிதாக வெளிப்புறச் சுவர்கள் பதிக்கப்பட்ட 2,500 கட்டடங்களின் பாதுகாப்பு குறித்து அவசரமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே, விபத்து குறித்த குற்றவியல் விசாரணைக்காக கிரீன்ஃபெல் டவரின் புதுப்பிப்புப் பணிகள் குறித்த ஆவணங்களை அரசு உடனடியாகக் கைப்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மேற்கு லண்டனில் 'கிரீன்ஃபெல்' என்ற 24 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த வாரம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 2-ஆவது தளத்தில் பிடித்த தீ 24-ஆவது தளம் வரை பரவியது.
இதில், அந்த கட்டடம் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தில், 58 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1974-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட அந்தக் கட்டடம், கடந்த 2016-ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
அப்போது, வெளிப்புற வெப்பம் மற்றும் குளிர்ச்சியிலிருந்து கட்டடத்தின் உட்பகுதியைப் பாதுகாக்கும் வகையில், புதிய வெளிப்புற தகடுகள் கூடுதலாகப் பொருத்தப்பட்டன.
இந்த நிலையில், கிரீன்ஃபெல் டவரின் இரண்டாவது தளத்தில் கடந்த வாரம் பிடித்த தீ, அதி வேகமாகப் பரவி மாபெரும் உயிர்ச் சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியதற்கு, கட்டடத்தின் மேற்புறதில் பதியப் பட்டிருந்த புதிய தகடுகள் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
சுவற்றுக்கும், அந்தத் தகட்டுக்கும் இடையே இருந்த வெப்பத் தடுப்புப் பொருள், எரிபொருளைப் போல் செயல்பட்டு தீயின் உக்கிரத்தை அதிகரித்ததாக நிபுணர்கள் கருதுகின்றனர்.