பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கச் சுற்றுப் பயணத்தின்போது சர்ச்சைக்குரிய ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) குறித்து இந்தியத் தரப்பில் கேள்வியெழுப்பினால், அதற்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான ஹெச்1பி விசா விவாகரம், இந்தியத் தரப்புடனான பேச்சுவார்த்தைத் திட்டத்தில் இடம் பெறவில்லை.
எனினும், பேச்சுவார்த்தையின்போது இந்தியத் தரப்பு இந்த விவகாரத்தை எழுப்பினால் அதற்குப் பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவது, குடியேற்றம் ஆகியவை குறித்த சில கொள்கை முடிவுகளை புதிய அரசு எடுத்து, அதற்கான சிறப்பு அதிகார உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அந்த ஆணையை உரிய துறைகள் செயல்படுத்த வேண்டும். அதன் விளைவுகள் குறித்து இப்போதே எதுவும் கூற முடியாது.
தற்போதைய நிலையில் ஹெச்1பி விசாவுக்காக விண்ணப்பிக்கும் முறையிலோ, விசா வழங்குவதற்கான நடைமுறையிலோ உடனடி மாற்றம் எதுவும் இல்லை.
மேலும், அதிபரின் உத்தரவு எந்தவொரு குறிப்பிட்ட நாட்டுக்கும் எதிரானது அல்ல.
அமெரிக்கா வரும் இந்தியக் குழுவினர் ஹெச்1பி விசா விவகாரத்தை எழுப்பினால், இந்த விவரங்களை அவர்களிடம் எடுத்துரைப்போம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.