மத்தியதரைக் கடலில் தத்தளித்த சுமார் 3,000 அகதிகள் மீட்கப்பட்டதாக இத்தாலிய கடலோரக் காவல் படையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
இத்தாலி தலைநகர் ரோமில் கடலோரக் காவல் படையினர் தெரிவித்ததாவது:
லிபியாவையொட்டிய மத்தியதரைக் கடலில் ஏராளமான அகதிகள் தத்தளித்து வருவதாக ஞாயிற்றுக்கிழமை எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நடுக்கடலில் அகதிகள் வரவைக் கண்காணித்து வரும் மனித ஆர்வலர் அமைப்பு மூலம் அந்தத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடலோரக் காவல் படைப் படகுகள் அந்தப் பகுதிக்கு விரைந்தன.
மேலும், சில சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் மீட்புப் படகுகளும் அந்தப் பகுதிக்கு விரைந்தன.
ரப்பர் படகுகள், மரப் படகுகளில் அளவுக்கு மீறி ஏற்றப்பட்டு ஆபத்தான பயணம் மேற்கொண்ட ஏராளமான அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட அகதிகள் இத்தாலியில் தாற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.
மத்தியதரைக் கடல் அவசர உதவிக் குழு என்னும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த படகு 946 பேரை மீட்டதாகத் தெரிவித்தது.
அதில் மூத்தவர்கள் துணையில்லாமல் தனித்துப் பயணம் செய்த 200 சிறார்கள் அடங்குவர்.