அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
நியூயார்க் நகரிலுள்ள கார்னெல் பொறியியல் கல்லூரியில் மின்னணுப் பொறியியல் இறுதியாண்டு படித்து வந்தவர் ஆலாப் நரசிபுரா. கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த இவர், கடந்த புதன்கிழமை மாயமானார்.
இந்நிலையில், நியூயார்க் நகரை அடுத்த இதாகா பகுதியிலுள்ள நீர்வீழ்ச்சி அருகே நரசிபுராவின் உடல் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து, நியூயார்க் போலீஸார் தெரிவித்ததாவது:
ஆலாப் நரசிபுரா காணாமல் போனதாக கிடைத்த தகவலை அடுத்து கார்னெல் பல்கலைக்கழக போலீஸார், இதாகா போலீஸார் ஆகியோருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம். இந்நிலையில், இதாகா நீர்வீழ்ச்சியை அடுத்த ஃபால் கிரீக் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, உயிரிழந்த நபர் ஆலாப் நரசிபுராதான் என்பதை கார்னெல் பல்கலைக்கழக போலீஸார் உறுதி செய்தனர்.
இந்த மரணத்தில் குற்றப் பின்னணி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்று நியூ
யார்க் போலீஸார் தெரிவித்தனர்.
இரங்கல்: ஆலாப் நரசிபுராவின் மறைவுக்கு கார்னெல் பொறியியல் கல்லூரி விடுதியின் துணைத் தலைவர் ரியான் லம்பார்டி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "வரும் டிசம்பரில் பொறியியல் படிப்பை நிறைவு செய்ய இருந்த நரசிபுரா, இதே கல்லூரியில் மேற்படிப்பை படிக்க விரும்பினார். அவரது திடீர் மறைவு வருத்தமளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.