அரபிக் கடலை அடுத்த ஏடன் வளைகுடா பகுதியில் இந்தியக் கப்பல் மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்த முயன்ற கடற்கொள்ளையர்களை இந்தியக் கடற்படையினர் விரட்டியடித்தனர்.
இதுதொடர்பாக, கடற்படை செய்தித் தொடர்பாளர் டி.கே.சர்மா கூறியதாவது:
அரபிக் கடலை அடுத்த ஏடன் வளைகுடா பகுதியில், 'எம்.வி. ஜாக் அமர்' என்ற இந்தியக் கப்பல் வெள்ளிக்கிழமை மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்த கொள்ளைக் கும்பல், அந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தி, கொள்ளையடிக்க முயன்றது.
அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையின் 'ஐஎன்எஸ் திரிசூல்' போர்க்கப்பலில் சென்ற கடற்படை வீரர்கள், அந்தக் கொள்ளையர்களை விரட்டியடித்தனர். இந்தியக் கடற்படையின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல், 12 கொள்ளையர்களும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
கப்பலில் இருந்த 26 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதன் மூலம், கடற்கொள்ளையர்களின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி, துப்பாக்கி குண்டுகள், கயிறுகள், ஏணிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.