சமீப காலமாக வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. இதனால் அவ்வப்போது அந்நாட்டினைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வும் ஏற்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி செயல்படுவதாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், சக்திவாய்ந்த அணு ஆயுத சோதனையை வடகொரியா திங்கள்கிழமை மீண்டும் நடத்தியது. இதனை ஐநா சபையின் அணு ஆயுத கண்காணிப்பு குழு கவனித்து கண்டனம் தெரிவித்தது.
இதுதொடர்பாக, ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில் இயங்கிவரும் ஐக்கிய நாடுகள் சபையின் அணு ஆயுத கண்காணிப்பகத்தின் தலைவர் யூக்கியா அமானோ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:
சர்வதேச சமுதாயத்தின் அறிவுறுத்தல்களை மீறிய வகையில் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 6-வது முறையாக வடகொரியா நடத்தியுள்ள அணு ஆயுத சோதனைகள் மிகுந்த கவலை அளிக்கிறது என்றிருந்தது.
இதுதொடர்பாக அமெரிக்கா, தென்கொரியா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் விசாரணை நடந்த வேண்டும் என்று ஐநா-விடம் கோரிக்கை வைத்தது. எனவே வடகொரியா மீது விசாரணை நடத்தப்படும் என புகார் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், வடகொரியா மீதான பொருளாதரத் தடைகள் விதிக்கப்போவதாக அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சீனாவும் இந்த சோதனைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.