அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான மிக சக்தி வாய்ந்த புயலான "இர்மா' அமெரிக்க கரையை இந்திய நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கடந்தது.
சுமார் 210 கி.மீ. வேகத்தில் காற்றுடனும், பலத்த மழையுடனும் அமெரிக்காவின் தென் கிழக்கு மாகாணமான ஃபுளோரிடா கரையை "இர்மா' புயல் கடந்தது. புயலின் சீற்றம் குறையாமல் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஃபுளோரிடா மாகாணத்தையும் கடந்து ஜார்ஜியா, தெற்கு கரோலினா மாகாணங்களிலும் இந்தப் புயல் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு உதவும் வகையில் 24 மணிநேரமும் செயல்பட கூடிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் தாக்கம் குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா நிலைமைகளை உண்ணிப்பாக கண்காணித்து வருகிறார்.
இந்தியர்களுக்கு உதவும் வகையில் ஹாட் லைன் எண் 202 258 8819 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அட்லாண்டா பகுதி இந்தியர்களுக்கான உதவியை நியூயார்க் நகரில் உள்ள தூதரக பொது அதிகாரி சந்தீப் சக்ரவர்த்தியை +14044052567 மற்றும் +1678179393 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபுளோரிடா, ஜார்ஜியா மாகாணங்களிலிருந்து சுமார் 63 லட்சம் பேர் வெளியேறிவிட்டதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்தது. ஃபுளோரிடா கரையோரப் பகுதிகளில் வசித்து வந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். விளையாட்டு உள்ளரங்குகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஆயிரக்கணக்கானவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புயல் நிவாரணப் பணிக்காக அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 7,400 வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், 140 ராணுவ சரக்கு ஹெலிகாப்டர்கள், 650 வாகனங்கள், 150 படகுகள் மீட்புப் பணிகளுக்காகத் தயார் நிலையில் உள்ளன.
ஃபுளோரிடமா மாகாணத்தில் சுமார் 1.2 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிவிட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்தது. நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் புயல் அவசர மையம் அமைக்கப்பட்டு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, பார்புடா, செயின்ட் மார்ட்டின், போர்ட்டோ ரிகோ உள்ளிட்ட கரீபியன் தீவுகளைத் தாக்கிய "இர்மா' பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அப்பகுதிகளில் மழை வெள்ளத்துக்கு 25 பேர் பலியாகினர்.