இராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 2014-இல் கைப்பற்றியபோது கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் நிலை குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல்-அபாடி தெரிவித்தார்.
இராக்கின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள மொசூல், மேற்கு பிராந்தியத்தில் உள்ள சில பகுதிகளை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றியது. அப்போது, 39 இந்தியர்களை பயங்கரவாதிகள் கடத்தினர்.
கடந்த 9 மாதங்களாக ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு மொசூல் நகரை இராக் ராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர்.
இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்த தகவல் எதுவும் இன்னமும் கிடைக்கவில்லை என்று செய்தியாளர்களிடம் ஹைதர் அல்-அபாடி தெரிவித்தார்.
கடத்தப்பட்ட இந்தியர்களின் உறவினர்களிடம் அவர்கள் மொசூல் அருகே பாதுஷ் பகுதியில் உள்ள சிறையில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று கடந்த ஜூலை மாதம் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடத்தப்பட்ட இந்தியர்கள் கட்டட நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.