இலங்கை பிரதமர் ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாக அவரது மகன் நமல் ராஜபட்ச தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமராக செயல்பட்டு வந்த ரணில் விகர்மசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி புதிய பிரதமராக ராஜபட்சவை நியமித்தார் அதிபர் சிறீசேனா. இதையடுத்து, ராஜபட்ச பிரதமராக செயல்பட தடை விதிக்கக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் 122 உறுப்பினர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராஜபட்ச பிரதமராக செயல்பட இடைக்காலத் தடை விதித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ராஜபட்ச உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கு ஜனவரி 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தது. மேலும், அதுவரை ராஜபட்ச பிரதமராக செயல்படுவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை தொடரும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், பிரதமர் ராஜபட்ச தனது பதவியை நாளை ராஜிநாமா செய்யவுள்ளதாக அவரது மகன் நமல் ராஜபட்ச தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
"நாட்டின் நிலைத்தன்மையை உறுதிபடுத்தும் வகையில், மக்களிடம் நாளை உரையாற்றிய பிறகு, பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ய ராஜபட்ச முடிவு செய்துள்ளார்" என்றார்.