அமெரிக்காவில் சமூக வலைதளங்கள் மூலம் கடந்த அதிபர் தேர்தலில் தலையீடு செய்ததாக 13 ரஷியர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாகவும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் மக்களின் கருத்தைத் திரட்டும் வகையிலான நடவடிக்கையில் ரஷியா ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த மத்திய அரசின் சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் மியூல்லர் அலுவலம், வெள்ளிக்கிழமை வெளியிட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அதிபர் தேர்தலின்போது சமூக வலைதளங்களின் மூலம் "குறிப்பிட்ட' கட்சி வேட்பாளர் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களைப் பரப்பியதாக 13 ரஷியர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது.
முகநூல், இன்ஸ்டாகிராம், சுட்டுரை (டுவிட்டர்) ஆகிய சமூக வலைதளங்களில் அந்த 13 பேரும் நூற்றுக்கணக்கான போலி பெயர்களில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மேலும், அந்த வலைதளங்களில் அந்தப் பெயர்கள் அனைத்தும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களுடயதைப் போன்ற தோற்றத்துடன் அவர்கள் அந்த வலைதளங்களில் பதிவுகள் மேற்கொண்டனர்.
அரசியலிலும், சமூக விவகாரங்களிலும் மிகத் தீவிரமானவர்களைப் போல் தங்களைக் காட்டிக் கொண்ட அவர்கள், குறிப்பிட்ட வேட்பாளருக்கு எதிரான கருத்துகளைப் பரப்பி வந்தனர்.
மேலும், போலியான அமெரிக்க ஆவணங்கள், வங்கிக் கணக்குகள், பெயர்களுடன் தேர்தல் பிரசார விளம்பரங்களையும் அவர்கள் இணையதளத்தில் மேற்கொண்டனர் என்று அந்த குற்றப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, ரஷியத் தலையீடு குறித்து மறுப்பு தெரிவித்து வரும் அதிபர் டிரம்ப்புக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.