வங்கதேசத்தில், குவைத் ராணுவ தலைமைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் புதன்கிழமை விபத்துக்குள்ளானது. எனினும், இந்த விபத்தில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.
இதுகுறித்து குவைத் நாட்டைச் சேர்ந்த 'குனா' செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது:
குவைத் ராணுவ தலைமைத் தளபதி முகமது அல்-காந்தேர், வங்கதேசத்தில் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் புதன்கிழமை விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து உடைந்தது.
மோசமான பனி மூட்டம் காரணமாக மரத்தில் மோதிய அந்த ஹெலிகாப்டரின் வால் பகுதி உடைந்து, முன்பகுதி தரையில் மோதியபடி விழுந்தது.
இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்த ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. முகமது அல்-காந்தேர் உள்ளிட்டோர் காயமின்றி உயிர் தப்பினர் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.