ரியாத்: சவுதி அரேபியாவில் வாகனங்களை இயக்க பெண்களுக்கு அனுமதியளிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக வாடகை டாக்சி ஓட்டுநர்களாக பெண்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மற்றும் அவரது மகன் முகமது பின் சல்மான் ஆகிய இருவரும் சமீபத்தில் அங்கு தொடர்ந்து பல்வேறு பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதல்கட்டமாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் விரைவில் வழங்கப்படும் என்று தெரிகிறது. அவர்கள் லாரி, பைக் ஓட்டவும் டிசம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் முறைப்படி உரிமம் பெற்று கார் ஓட்டலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இவர்களது திட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக அமைந்துள்ளது.
இந்த நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற உபேர் மற்றும் துபாயை சேர்ந்த கரீம் ஆகிய கால் டாக்ஸி நிறுவனங்கள், பெண் ஓட்டுனர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளன. சவுதி அரேபியாவை பொருத்தவரையில் கால் டாக்ஸியினைப் பயன்படுத்துவர்களில் 80 சதவீதம் பேர் பெண்களே என்பதால் இந்த திட்டம் பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் பெண் ஓட்டுநர்கள் பணியமர்த்தப்பட உள்ளார்கள் எனத் தெரிகிறது.