பாகிஸ்தானில் ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்கா கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 2,714 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, பாகிஸ்தானின் தேசிய பயங்கரவாதத் தடுப்பு அமைப்பின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி, அந்த நாட்டிலிருந்து வெளியாகும் "தி டாண்' நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:
தனது ஆளில்லா விமானங்கள் மூலம் பாகிஸ்தான் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அமெரிக்கா கடந்த 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.
பெரும்பாலான தாக்குதல்கள் 2008 முதல் 2012-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டன. தலிபான் பயங்கரவாதிகளைக் குறிவைத்து 409 முறை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 2,714 பேர் உயிரிழந்தனர்; 728 பேர் காயமடைந்தனர் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
தங்கள் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அமெரிக்கா நடத்தி வரும் இத்தகைய ஆளில்லா விமானத் தாக்குதல்கள், தங்களது இறையாண்மையைக் குலைக்கும் செயல் என்று பாகிஸ்தான் புகார் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
எனினும், பெரும்பாலும் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ நடத்தும் இத்தகைய தாக்குதல்களில் பல, பாகிஸ்தானின் உளவுத் துறையின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.