பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினர் மீது மேலும் நான்கு ஊழல் வழக்குகளை பரிந்துரைக்க தற்போதைய பிரதமர் இம்ரான் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து "எக்ஸ்பிரஸ் டிரிபியூன்' செய்தித்தாளில் ரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீஃப் இருந்தபோது அவரது குடும்பத்தினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாபின் முன்னாள் முதல்வரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப், நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ் ஆகியோர் அரசு அதிகாரங்களை தவறாக பயன்படுத்திய விவரங்களை இம்ரான் கான் ஆலோசகர் ஷேக்ஸாத் அக்பர், சிறப்பு உதவியாளர் இஃப்திகார் துரானி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் பட்டியலிட்டதாக எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷெரீஃப் குடும்பத்தினர் லண்டனில் சொத்துகளை வாங்கி குவித்தது தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு இம்ரான் தலைமையிலான அரசு பிரிட்டனுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அரசு கஜானாவில் உள்ள பணத்தை பொழுதுபோக்கு மற்றும் பரிசு பொருள்களை வாங்கி குவிப்பதற்கு ஷெரீஃப் குடும்பத்தினர் முறைகேடாக அதிகளவிலான நிதியை ஒதுக்கியுள்ளனர். ஷெரீஃப் குடும்பத்தினர் தங்கியிருந்த ராய்விண்ட் மஹால் பாதுகாப்புக்காக மட்டும் ரூ.60 கோடி வரையிலான அரசு பணத்தை அவர்கள் வீணடித்துள்ளனர்.
இதுதவிர, விதிமுறைகளை மீறி ஷாபாஸ் மற்றும் மரியம் ஆகியோர் விமான பயணங்களை மேற்கொண்டனர். அந்த வகையில், பாகிஸ்தான் அரசின் விமான சேவை நிறுவனத்துக்கு ரூ.3 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஷெரீஃப் குடும்பத்தினருக்கு எதிராக மேலும் 4 புதிய ஊழல் வழக்குகளை ஊழல் தடுப்பு நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்க இம்ரான் அரசு முடிவு செய்துள்ளது என அந்த அதிகாரிகள் பேட்டியின் போது தெரிவித்ததாக எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.