3 நாள் பயணமாக, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (புதன்கிழமை) ஆஸ்திரேலியா சென்றடைந்தார்.
இந்த 3 நாள் பயணத்தின் போது, அவர் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிட்னியில் உள்ள பாராமாட்டா நகரில் அவரது திருவுருவச் சிலை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.
இதைத்தொடர்ந்து, இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் தொழில்புரியும் சமூகத்தினர் மத்தியில் உரையாடவுள்ளார். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை விக்டோரியாவின் கவர்னர் லிண்டா தேசாவ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷார்டன் ஆகியோரை சந்திக்கிறார்.
மேலும், ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையம் மற்றும் இந்திய நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடு இடையே கையெழுத்தாக இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்பார்வையிடவுள்ளார் என்று தெரிகிறது.
இதற்காக, ஆஸ்திரேலியா சென்றடைந்த அவருக்கு இன்று நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. இவருடைய இந்த பயணத்தில் அவரது மனைவி சவிதா கோவிந்தும் உடன் சென்றிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் முதல் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.