மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சிலையை பெர்ன் நகரில் அமைக்க ஸ்விட்சர்லாந்து அரசு திட்டமிட்டு வருகிறது.
ஹிந்தி திரையுலகில் கொடிகட்டி பறந்த தயாரிப்பாளரும், இயக்குநருமான யஷ் சோப்ராவுக்கு முதன்முதலாக ஸ்விட்சர்லாந்து அரசு சிலை அமைத்து கௌரவித்தது.
அவரைத் தொடர்ந்து ஸ்ரீதேவிக்கு சிலை அமைக்கப்படவுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
யஷ் சோப்ராவின் பல திரைப்படங்கள் ஸ்விட்சர்லாந்தில் படமாக்கப்பட்டன. இதன்மூலம், இந்தியர்கள் எங்கள் நாட்டுக்கு அதிக அளவில் சுற்றுலா வந்தனர். ஸ்ரீதேவி நடித்த "சாந்தனி' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஸ்விட்சர்லாந்தில் நடத்தப்பட்டது. அவரை கௌரவிக்கும் வகையில் பெர்ன் நகரில் சிலை அமைக்க திட்டமிட்டு வருகிறோம். கடந்த 1995-ஆம் ஆண்டு யஷ் சோப்ராவின் தயாரிப்பில் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' என்ற திரைப்படம் ஸ்விட்சர்லாந்தில் எடுக்கப்பட்டது.
யஷ் சோப்ராவின் பெயரை, ரயிலுக்கும், ஏரிக்கும் சூட்டி அரசு கௌரவித்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார். ஸ்ரீதேவி, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி துபையில் காலமானார்.