சீனாவில் உள்ள தேவாலயங்களுக்கு பாதிரியார்களை நியமனம் செய்வது தொடர்பாக சீனா மற்றும் வாடிகன் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 1951-ஆம் ஆண்டில், சீன தேவாலயங்களுக்கு பாதிரியார்களை நியமனம் செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது தொடர்பாக பிரச்னை பூதகரமாக வெடித்தது. இதையடுத்து, சீனாவுக்கும் சர்வதேச கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான ஹோலி சீ-க்கும் மோதல் மூண்டது. கடந்த 72 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த மோதல் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, சீன தேவாலயங்களுக்கு பாதிரியார்களை நியமிப்பது தொடர்பாக அரசுக்கும் வாடிகனுக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஹோலி சீ அனுமதி இல்லாமலேயே இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, சீன அரசால் நியமிக்கப்பட்ட ஏழு பாதிரியார்களுக்கு போப் பிரான்சிஸ் அங்கீகாரம் அளித்துள்ளார். இருப்பினும், இருதரப்புக்கும் ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் தற்காலிகமானதே என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் மதமாக கிறிஸ்தவம் உள்ளது. கம்யூனிஸ்ட் நாடான சீனாவில் 9 கோடி கிறிஸ்தவர்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.