இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரானார் அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச.
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பதவி வகித்து வந்தார்.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, ராஜபட்சவை பிரதமராக இலங்கை அதிபர் சிறீசேனா நியமித்ததிலிருந்து அந்நாட்டு அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வந்தது.
ராஜபட்சவை பிரதமராக நியமிக்கலாம் என்று அதிபர் எடுத்த முடிவை ஏற்க முடியாது என்ற கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இதையடுத்து, ராஜபட்ச பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார்.
ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். 51 தினங்களுக்கு பிறகு கூடிய இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தில், அவைத் தலைவர் கரு ஜெயசூர்யா, எதிர்க்கட்சித் தலைவர் ராஜபட்ச என்று அறிவித்தார்.
ராஜபட்சவை பிரதான எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்ததற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ரௌஃப் ஹக்கீம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராஜபட்ச கட்சி மாறிவிட்டதால் அவருடைய எம்.பி. பதவி முடிவுக்கு வந்துவிட்டது. இதன்காரணமாக, அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கூடாது என்று அவர்கள் தெரிவித்தனர்.