உக்ரைன் விவகாரத்தை காரணம்காட்டி ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் உடனான சந்திப்பை திடீரென ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
கடந்த 2014-இல் ரஷியா உக்ரைன் கிரிமியா பகுதியை தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில் கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்கள் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதில் இருந்து மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பரபரப்பான சூழ்நிலையில், ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் ரஷிய அதிபர் விளாதிமிர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பது உறுதி என ரஷிய அதிபரின் மாளிகை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உக்ரைன் நாட்டு கடற்படை கப்பல்கள் சிறைபிடிப்பு பிரச்னையை காரணம்காட்டி ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் உடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: உக்ரைனில் 3 கடற்படை கப்பல்கள் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றிய கப்பல்கள் மற்றும் அதன் மாலுமிகள் இன்னமும் ரஷியாவில் இருந்து உக்ரேனுக்கு திரும்பவில்லை என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டு எனது முன்னர் திட்டமிடப்பட்ட புதினுடனான சந்திப்பை ரத்து செய்ய தீர்மானித்துள்ளேன்.
இந்த பிரச்னை தீர்க்கப்படும்போது மீண்டும் கூடிய விரைவில் ஒரு அர்த்தமுள்ள சந்திப்பை தான் எதிர்பார்க்கிறேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், உக்ரைன் நாட்டுக்கு அதிக ஆதரவு அளிக்கும்படி ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தியது.
2014-ல் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா உக்ரைனில் இருந்து கிரிமியாவை இணைத்துக்கொள்வதற்காக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.