ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களை எவரெஸ்ட் பகுதிகளில் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வருபவர்களால் அந்தப் பகுதியில் மிகப் பெரிய அளவிலான குப்பைகள் சேர்வதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்காக இந்த ஆண்டு இதுவரை இல்லாத எண்ணிக்கையில் மலையேற்ற ஆர்வலர்கள் வந்திருந்தனர்.
மேலும், அந்தப் பகுதியில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட துப்புரவுப் பணியின்போது 10 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன.
இந்த நிலையில், எவரெஸ்ட் பகுதியில் குப்பைகள் சேர்வதைக் குறைக்கும் வகையில் 30 மைக்ரான்களுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை மலையேற்ற ஆர்வலர்கள் எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.