எகிப்தில் இந்தியாவைச் சேர்ந்த 16 பயணிகளுடன் சென்ற இரு பேருந்துகள் டிரக் மீது மோதி சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.
அயின் சோக்னா - சஃபர்னா சாலையில் ஹூர்கதா கடல் நகரத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து, முன்னால் சென்ற டிரக் மீது மோதியுள்ளது. இதனால் பின்தொடர்ந்து வந்த மற்றொரு பேருந்தும் மோதியது. டிரக் அடுத்து இரு பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 20-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் ஒரு இந்தியர், மலேசியாவைச் சேர்ந்த இருவர் மற்றும் எகிப்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த பேருந்து விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக அறிய +20-1211299905 மற்றும் +20-1283487779 ஆகிய அவசர எண்களை தொடர்பு கொள்ளவும் என எகிப்தின் இந்தியத் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பேருந்து விபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 8 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் எகிப்தைச் சேர்ந்த அஹ்ரம் எனும் இணையப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.