வங்கதேசத்தில் நான்காவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஷேக் ஹசீனா, தனது பதவிக் காலத்துக்குப் பிறகு அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதாகக் கூறியுள்ளார். இளைய தலைமுறையினருக்கு வழிவிடுவதற்காக, இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசீனா, கடந்த மாதம் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், ஜெர்மனி ஊடகத்துக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.
அப்போது, அவர் கூறியதாவது: நான்காவது முறையாக தற்போது பிரதமர் பதவியை வகிக்கிறேன். இதற்குப் பிறகும் பதவியில் நீடிக்க நான் விரும்பவில்லை. இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், ஓய்வெடுக்க விரும்புகிறேன்.
இருப்பினும், ஏழ்மை நிலையை ஒழிப்பதற்கான எனது போராட்டம் தொடரும்.
உணவுப் பாதுகாப்பு, வீட்டு வசதி, தரமான கல்வி, மருத்துவ வசதி, வேலைவாய்ப்புகள் ஆகியவை மக்களின் அடிப்படைத் தேவைகளாகும்.
அவற்றை அரசு பூர்த்தி செய்தாக வேண்டும்.
ஒவ்வொரு குடிமகனும் விரும்பும் சிறப்பான வாழ்வை உறுதிசெய்ய வேண்டியுள்ளது என்றார் அவர்.
இந்த செய்தியை, வங்கதேசத்தில் இருந்து வெளியாகும் டாக்கா டிரிபியூன் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
காஜிப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட ஷேக் ஹசீனா, ஓய்வுக்காலத்தை, வங்கதேசத்தின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தனது மூதாதையர்களின் சொந்த ஊரான துங்கிபரா கிராமத்தில் கழிக்க விரும்புவதாகக் கூறியிருந்தார்.