சீன முன்னாள் அதிபர் மா சே துங்கின் செயலாளர் லி ருயி (101) உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார்.
இது தொடர்பாக அவரது உறவினர்கள் கூறுகையில், ""நுரையீரல் தொற்று காரணமாக லி ருயி நீண்ட நாள்களாக அவதிப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து அண்மையில் அவரது நுரையீரல் செயலிழந்தது. இதன் காரணமாக அவர் சனிக்கிழமை மரணமடைந்தார்'' என்றனர்.
கடந்த 1950களில் சீனாவின் அப்போதைய அதிபர் மா சே துங்கின் செயலாளராக லி ருயி பதவி வகித்தார். அப்போது, பல முக்கிய முடிவுகளுக்குக் காரணமாக இருந்த அவர், பின்னாளில் அவருடைய பல திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர், கலாசாரப் புரட்சியின்போது கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.
சீனாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட அவர், கட்சிக்கு எதிராகப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்ததால் கட்சியிலிருந்து மீண்டும் நீக்கப்பட்டார். சீன அதிபரின் பதவிக் காலத்தை நீட்டித்து, அந்நாட்டின் அரசமைப்புச் சட்டம் கடந்த ஆண்டு திருத்தப்பட்டதற்கு லி ருயி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.