வங்கதேச தலைநகர் தாகாவில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனவர்களின் எண்ணிக்கை 70-ஆக வியாழக்கிழமை அதிகரித்தது.
தாகாவில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் செயல்பட்டு வந்த அமில குடோனில் புதன்கிழமை இரவு 10:40 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. எரிவாயு சிலிண்டர் வெடித்து இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதி என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என தீயணைப்புப் படைத் தலைவர் தெரிவித்தார். சுமார் 37 தீயணைப்பு வாகனங்கள், 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்துக்கு அருகில் மணவிழா நடைபெறுவதால், அங்கிருந்தவர்களுக்கும் தீ விபத்தில் சிக்கினர்.
2 கார்கள், 10 சைக்கிள் ரிக்ஷாக்கள் உள்ளிட்டவையும் தீயில் எரிந்து நாசமாயின. மீட்புப் பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெறுவதாக தாகா துணை கமிஷனர் இப்ராஹிம் கான் தெரிவித்தார்.
முன்னதாக, வங்கதேச தலைநகர் தாகாவில் கடந்த 2010-ஆம் ஆண்டில் இதேபோன்று அமில குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி அதிகபட்சமாக 120 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.