ஊழல் வழக்கில் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பிலாவல் புட்டோ-ஜர்தாரி வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும்படி அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து நீதிபதி இஜாஸ்-உல்-அஹ்ஸான் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பிலாவல் புட்டோ உள்ளிட்டவர்களை நீக்குவதால், அவர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு எந்தத் தடங்கலும் ஏற்படாது.
அவர்களுக்கு எதிரான போதிய ஆதாரங்கள் கிடைத்தால், அவர்களை மீண்டும் தடைப்பட்டியலில் சேர்க்க அதிகாரிகள் மத்திய அரசைக் கோரலாம் என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலி வங்கிக் கணக்கு மோசடி குற்றச்சாட்டுக்குள்ளான பிலாவல் புட்டோ வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு கடந்த மாதம் அறிவித்தது.
இந்த மோசடி குறித்து உச்சநீதிமன்ற கூட்டுக் குழு நடத்தி வரும் விசாரணையில் முன்னாள் அதிபர் ஜர்தாரி, பிலாவல் புட்டோ உள்ளிட்ட 172 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.