ரஷியாவைச் சேர்ந்த "ஃபேஸ்ஆப்' என்ற செயலி அமெரிக்காவில் உளவு பார்ப்பதாக எழுந்துள்ள சந்தேகம் குறித்து எஃப்பிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை (செனட்) உறுப்பினர் சக் சுச்மர் வலியுறுத்தியுள்ளார்.
ரஷியாவின் செயிண்ட் பிட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது "ஃபேஸ்ஆப்' என்ற செயலி. இதனைப் பயன்படுத்தி ஒருவர் தனது புகைப்படத்தை வயதான தோற்றத்துக்கும், இளமையான தோற்றத்துக்கும் மாற்றிக் கொள்ள முடியும். இந்தச் செயலி அமெரிக்கா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் பலராலும் விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்தச் செயலி மூலம் அமெரிக்க மக்களை ரஷியா உளவு பார்க்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக சக் சுச்மர் கூறியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்காவின் மிகஉயரிய விசாரணை அமைப்பான எஃப்பிஐ-க்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், அமெரிக்க மக்கள் பலராலும் "ஃபேஸ்ஆப்' செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலியை ரஷிய நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தச் செயலியை அறிதிறன் பேசியில் பதிவிறக்கம் செய்யும்போது அது பல்வேறு அனுமதிகளைக் கோருகிறது. இதன் மூலம் அமெரிக்க மக்களின் செல்லிடப்பேசியில் உள்ள பல்வேறு தகவல்களை அந்தச் செயலியைத் தயாரித்த நிறுவனம் தெரிந்து கொள்ள முடியும். மேலும், அமெரிக்க மக்கள் பதிவேற்றும் செய்யும் புகைப்படங்களையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே, இந்த விவகாரத்தை தீவிரப் பிரச்னையாகக் கருத்தில் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று சச் சுச்மர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக "ஃபேஸ்ஆப்' செயலி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில், எங்கள் செயலியைப் பயன்படுத்துபவரிடம் இருந்து புகைப்படம் மட்டுமே பெறப்படும். அதுவும் 48 மணி நேரத்தில் எங்கள் "சர்வரில்' இருந்து தானாகவே நீங்கிவிடும். மற்றபடி வேறு எந்தத் தகவல்களையும் பயனாளர்களின் செல்லிடப்பேசியில் இருந்து பெறுவதில்லை' என்று கூறியுள்ளது.