ஆப்கானிஸ்தானின் காபூல் பல்கலைக்கழகத்துக்கு அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள காபூல் பல்கலைக்கழகத்துக்கு வெளியே தேர்வுக்காக மாணவர்கள் வெள்ளிக்கிழமை காத்திருந்தனர். அப்போது பல்கலைக்கழகத்துக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில், 8 பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி கடந்த 17ஆண்டுகளாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதுமட்டுமன்றி, அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் மீதும் அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். காபூலில் உள்ள முக்கிய பிரபலங்கள் மற்றும் முக்கியத் தலைவர்களை குறிவைத்தும் தலிபான்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்நாட்டில் தற்போது ஐ.எஸ் சர்வதேச பயங்கரவாதிகளின் ஊடுருவலும் அதிகரித்து வருகிறது. தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆப்கன் அரசு ஈடுபட்டு வருகிறது. எனினும் இதுவரை எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.
வாகனங்களில் வெடிகுண்டுகளை நிரப்பி அதை சாலையில் நிறுத்தி வெடிக்க வைப்பது தலிபான்கள் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வழக்கமான தாக்குதல்களில் ஒன்றாகும்.
இந்நிலையில், இந்தத் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் நங்கஹார் மாகாணத்தில் நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அதனால், இந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.