கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பிக்கோவுடன் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கிர்கிஸ்தான் சென்றுள்ளார். மாநாட்டினிடையே அந்நாட்டு அதிபர் ஜீன்பிக்கோவை அவர் சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், "கிர்கிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தற்போதைய தலைவருமான சூரோன்பே ஜீன்பிக்கோ வரவேற்றார். மாநாட்டின் இடையே, அதிபர் ஜீன்பிக்கோவை பிரதமர் மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், கிர்கிஸ்தான் அதிபர் ஜீன்பிக்கோவுடன் நடத்திய முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.