சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 12 பேர் உயிரிழந்தனர்; 125 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தென்மேற்கே அமைந்துள்ள சிசுவான் மாகாணம், யிபின் நகரில் திங்கள்கிழமை இரவு 10.55 மணிக்கு (உள்ளூர் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6 அலகுகளாகப் பதிவானது.
அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 5.3 ரிக்டர் அளவு கொண்ட பின்னதிர்வு செவ்வாய்க்கிழமை ஏற்பட்டது.
பூமிக்கு 16 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழந்தனர்; 125 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 6 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.