சிரியா ஜிஹாதி குழு தாக்குதலில் அரசுப் படையினர் 21 பேர் பலி

சிரியாவின் இட்லிப் மாகாணம் அருகே அல் காய்தா ஆதரவு சிரியா ஜிஹாதி குழுவினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் அரசுப் படையினர் மற்றும் அரசு ஆதரவுப் படையினர் என 21 பேர் கொல்லப்பட்டதாக

சிரியாவின் இட்லிப் மாகாணம் அருகே அல் காய்தா ஆதரவு சிரியா ஜிஹாதி குழுவினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் அரசுப் படையினர் மற்றும் அரசு ஆதரவுப் படையினர் என 21 பேர் கொல்லப்பட்டதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக, பிரிட்டனிலிருந்து செயல்படும் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் ராமி அப்தல் ரஹ்மான் கூறியதாவது:

ஹமா மாகாணத்திலிருந்து வடக்கே மசாஸ்னா கிராமத்தில் அரசுப் படைகள் அமைத்திருந்த நிலைகள் மீது அல் காய்தா ஆதரவு அமைப்பான அன்சர் அல்-தாவ்ஹித் ஜிஹாதிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தாக்குதல் நடத்தினர். இதில் அரசுப் படையினர் மற்றும் அரசு ஆதரவுப் படையினர் என 21 பேர் கொல்லப்பட்டனர்.

அதேபோல், ஜிஹாதி குழுவைச் சேர்ந்த 5 பேரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்-துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகு, அரசுப் படைகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் இதுவே மிகப்பெரியதாகும் என்று ராமி அப்தல் ரஹ்மான் கூறினார்.

அரசுக்கு எதிரான படையினருக்கு அளித்து வரும் ஆதரவை துருக்கி நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், போர் நடைபெறாத பகுதியில் இருந்து கிளர்ச்சியாளர்கள் தங்களது கனரக ஆயுதங்களை திரும்பப் பெற வேண்டும் எனவும் கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி ரஷியா-துருக்கி இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

தற்போது தாக்குதல் நடத்திய அன்சர் அல்-தௌஹித் அமைப்பானது, இட்லிப் பகுதியில் பரவலாகச் செயல்பட்டு வரும் ஹுராஸ் அல்-தீன் அமைப்புடன் தொடர்புடையதாகும். இந்த இரு அமைப்புகளுமே, சிரியாவில் உள்ள அல் காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com