இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்தப் பிரச்னை தொடர்பாக, இரு நாட்டு உயரதிகாரிகளுடன் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் விவாதித்தார்.
இதுகுறித்து பொதுச் செயலரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றம் குறித்து நாங்கள் நன்கு அறிவோம். இந்தப் பிரச்னை தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரிடம் குட்டெரெஸ் பேசவில்லை.
இருப்பினும், இரு நாட்டு உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, அவர் தனது கவலைகளைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கு யாராவது ஒருவர் முன்வர வேண்டியது அவசியம் என்றும் குட்டெரெஸ் வலியுறுத்தினார் என்றார் ஸ்டீபன் டுஜாரிக். இதேபோல், "பரஸ்பர ஒத்துழைப்பு மூலம், இந்தியாவும், பாகிஸ்தானும் பதற்றத்தைத் தணிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்' என்று குட்டெரெஸ் கடந்த வாரம் கூறியிருந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். அந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை கடந்த மாதம் 26-ஆம் தேதி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள், தற்கொலைத் தாக்குதலுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தவர்கள் என ஏராளமானோர் உயிரிழந்தனர். மறுநாள், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை, இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் விரட்டியடித்தன.
நடுவானில் நடைபெற்ற மோதலில், இந்தியாவின் மிக்-21 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, அதில், பயணம் செய்த விமானப் படை விமானி அபிநந்தனை, பாகிஸ்தான் சிறைப்பிடித்தது. இதையடுத்து, சர்வதேச நாடுகளின் நெருக்கடிக்குப் பணிந்து, அவரைக் கடந்த 1-ஆம் தேதி இந்தியாவிடம் பாகிஸ்தான் அரசு ஒப்படைத்தது. அடுத்தடுத்த மோதல் சம்பவங்களால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.