கர்தர்பூர் குருத்வாரா விவகாரம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே அடாரி-வாகா எல்லைப்பகுதியில் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவும் இவ்வேளையில் பாகிஸ்தானில் அமைந்துள்ள சீக்கிய வழிப்பாட்டுத்தலமான குருத்வாராவுக்கு பஞ்சாப்பைச் சேர்ந்த சீக்கியர்கள் புனித யாத்திரை செல்வது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில், மார்ச் 19-ஆம் தேதி எல்லைப் பகுதிகளில் உள்ள பதற்றத்தை நீக்கும் விதமான நடவடிக்கைகள் தொடர்பாக தொழில்நுட்பக்குழுவினரின் சந்திப்பும் பின்னர் ஏப்ரல் 2-ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவாரத்தையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்துக்கு தடையின்றி செல்வது தொடர்பாக நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக நிலை எட்டப்பட்டுள்ளதாக இருநாடுகளின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பு இந்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் எஸ்.சி.எல்.தாஸ் மற்றும் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தெற்காசிய மற்றும் சார்க் அமைப்புகளின் தலைமை இயக்குநருமான முகமது ஃபைஸல் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.