புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பது குறித்து சீனாவுடன் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் ஆதரவுடன் பிரான்ஸ் புதன்கிழமை கொண்டு வந்தது. எனினும், கவுன்சிலின் மற்றொரு நிரந்தர உறுப்பு நாடான சீனா அதற்கு முட்டுக்கட்டை போட்டது.
இந்த விவகாரம் குறித்து முழுமையாக ஆய்வு செய்வதற்கு அவகாசம் தேவைப்படுவதால் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முடிவை தள்ளிவைப்பதாக சீனா தெரிவித்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சீனாவுடன் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மேலும், பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான அந்த 3 நாடுகளும் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் கொண்டு வர திட்டமிட்டுள்ளன.
அதற்கு முன்னதாக, இந்த விவகாரம் குறித்து கவுன்சில் கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தவும் அவை திட்டமிட்டுள்ளன.
இந்தியா கண்டனம்: மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில் சீனாவில் நிலைப்பாட்டுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து வருகிறது.
ஒரு பயங்கரவாதிக்கு ஆதரவாக சீனா செயல்படுவதைக் கண்டு அதிருப்தி அடைந்துள்ள பாதுகாப்பு கவுன்சிலின் பிற உறுப்பு நாடுகள், மசூர் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பதற்கு வேறு வகை நடவடிக்கைகளையும் எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முயற்சி: ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கச் செய்வதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.