ரஷிய தலைநகர் மாஸ்கோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய பயணிகள் விமானத்தில் நேரிட்ட தீ விபத்தில் 13 பேர் பலியாகினர்.
ரஷியத் தயாரிப்பு சூப்பர் ஜெட்-100 ரகத்தை சேர்ந்த அந்த பயணிகள் விமானம், மாஸ்கோவில் உள்ள செரிமேடியேவோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அபாய சிக்னலை வெளியிட்டது. பின்னர் அதே விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
முதலில் அந்த விமானத்தை தரையிறக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. இதையடுத்து 2ஆவது முறையாக விமானத்தை மீண்டும் தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது முன்பகுதி தரையில் உரசியபடி விமானம் தரையிறங்கியது. இதில் விமானம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் அவசரபாதை வழியாக உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் 13 பயணிகள் பலியாகினர். அவர்களில் 2 பேர் சிறார்கள் என்று மாஸ்கோவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.